கொரோனா வைரசில் இருந்து எங்களை 2 பேர் பாதுகாக்கின்றனர் - நித்தியானந்தா வெளியிட்ட கலகல வீடியோ


கொரோனா வைரசில் இருந்து எங்களை 2 பேர் பாதுகாக்கின்றனர் - நித்தியானந்தா வெளியிட்ட கலகல வீடியோ
x
தினத்தந்தி 15 March 2020 8:45 AM GMT (Updated: 15 March 2020 10:22 AM GMT)

கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது என சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.

இவர் மீது  கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.  கடத்தல் வழக்கில் குஜராத் போலீசார் நித்யானந்தாவை தேடியபோது அவர் பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரிய வந்தது. ஈக்வேடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கிடையே கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

நித்யானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடினர். இதையடுத்து புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து நித்யானந்தாவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையில் அவ்வப்போது  அவர் தினமும் யூடியூப்பில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். டுவிட்டரில் அன்றாடம் கருத்துகளையும்  தெரிவித்து வருகிறார்.

ஸ்ரீகைலாசா நாட்டின் பிரதமர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட நித்யானந்தா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில்  வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-

கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story