கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி பேச்சு


கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 16 March 2020 1:07 AM GMT (Updated: 16 March 2020 1:07 AM GMT)

மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

மும்பை,

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவி வரும் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக மராட்டிய மாநிலத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மராட்டியத்தில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், மும்பை பெருநகரில் 8 பேரும், புனே மற்றும் பிம்பிரி-சிஞ்ச்வாட் பகுதியில் 15 பேரும், தானே, அகமதுநகரில் தலா ஒருவரும், யவத்மாலில் 2 பேரும், நாக்பூரில் 4 பேரும் ஆட்கொல்லி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து மாநில அரசு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்கும் வகையில் தியேட்டர்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று அவுரங்காபாத்தை சோ்ந்த 59 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ரஷியா மற்றும் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்று வந்தவர் ஆவார். கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக் கப்பட்ட பெண்ணுக்கு அவுரங்காபாத்தில் உள்ள தூத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தொடர்ந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

மும்பையில் உள்ள கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் நாள் ஒன்றுக்கு கொரோனா அறிகுறி உள்ள 100 பேருக்கு மட்டுமே சோதனை நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 350 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு சில நாட்களில் மும்பை கே.இ.எம். ஆஸ்பத்திரியில் மேலும் ஒரு ஆய்வகம் அமைக்கப்படும்.

இதுதவிர மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரி, ஹபிகின் நிறுவனத்திலும், புனேயில் உள்ள ஆஸ்பத்திரியிலும் 15 முதல் 20 நாட்களில் ஆய்வகங்கள் அமைக்கப்படும். இதுவரை மாநிலத்தில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 9 பேர் மும்பை கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் போனில் பேசியுள்ளார். அப்போது, மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே, பிரதமர் நரேந்திர மோடியிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்தநிலையில் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 31-ந்தேதி வரை மாநில பணியாளர் தேர்வாணையம் (எம்.பி.எஸ்.சி.) நடுத்தும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்து உள்ளது.

Next Story