நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு: ம.பி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்


நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு: ம.பி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
x
தினத்தந்தி 17 March 2020 6:30 AM GMT (Updated: 17 March 2020 7:52 AM GMT)

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏக்களும், பதவியை ராஜினாமா செய்வதாக  சபாநாயகருக்கு  கடிதம் அனுப்பினர்.  அவர்களில் 6 பேரின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். 

இத்தகைய காரணங்களால், 230 உறுப்பினர்களைக் கொண்ட  மத்திய பிரதேச  சட்டசபையில் தற்போது 222 உறுப்பினர்கள்தான் உள்ளனர். பெரும்பான்மைக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. காங்கிரசுக்கு 108 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 107 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

கமல்நாத் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக பா.ஜனதா தரப்பு, கவர்னர் லால்ஜி தாண்டனிடம் முறையிட்டது. அதையடுத்து, சட்டசபையில் 16-ந் தேதி (நேற்று) கவர்னர் உரைக்கு பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு முதல்-மந்திரி கமல்நாத்துக்கு கடந்த 14-ந் தேதி கவர்னர் கடிதம் எழுதினார். ஆனால், நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத் மறுத்துவிட்டார். இதையடுத்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கமல்நாத் அரசுக்கு  ஆளுநர் மீண்டும் கடிதம் எழுதினார்.

இதற்கு மத்தியில்,  முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்பட பாஜக எம்.எல்.ஏக்கள் சிலர், நேற்று சுப்ரீம் கோர்ட்டை அணுகினர். மத்திய பிரதேசத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தங்கள் மனுவில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூறியிருந்தனர். இந்த மனுவை அவசர வழக்காக இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய பிரதேச அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியதோடு, மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது. 


Next Story