கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியா ஆபத்தான கட்டத்தில் இல்லை? - இந்திய மருத்துவ கவுன்சில்


கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியா ஆபத்தான கட்டத்தில் இல்லை? - இந்திய மருத்துவ கவுன்சில்
x
தினத்தந்தி 18 March 2020 6:06 AM GMT (Updated: 18 March 2020 6:06 AM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா 2 வது கட்டத்தில் உள்ளது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 873 ஆக அதிகரித்து உள்ளது.நேற்று ஒரே நாளில் ஒரு இந்தியர் உள்பட 862 பேர் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 

கொரோனா தோன்றிய உகான் நகரில் அதன் வீரியம் குறைந்து வருகிறது. நேற்று கூடுதலாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கியது. ஆனால், சீனா முழுவதும் மேலும் 13 பேர் பலியானார்கள்.

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 25 வெளிநாட்டவர்கள் உள்பட 147 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும்   இந்தியா 2-வது கட்டத்தில் உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில்  தெரிவித்துள்ளது.

முதல் கட்டம்: கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது.

2-வது கட்டம் : பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ கொரோனா தொற்று ஏற்படுவது. இதில் குறைவான நபர்களே பாதிக்கப்படுவர். யாரிடம் இருந்து தொற்று ஏற்பட்டிருப்பது என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். இதனால் வைரஸ் சங்கிலியை அறுத்தெறிய முடியும்.

3-வது கட்டம்: இது சமூகத் தொற்று ஏற்படும் கட்டம். யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்றே தெரியாமல் சமூகத்தில் பரவலான மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 3-ம் கட்டத்தில் உள்ளன.

4-வது கட்டம் : இதுதான் மிகவும் மோசமான நிலை. எப்போது தொற்று குணமாகும், முடியும் என்றே தெரியாமல் ஏற்படும் பேரிடர். சீனாவில் இதுதான் நடந்தது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குநர் பலராம் பார்கவா கூறும்போது:-

 ''நாம் எல்லோரும் இரண்டாவது கட்டத்தில் இருக்கிறோம் என்று அனைவருக்கும் தெரியும். இப்போதைய சூழலில் மூன்றாம் கட்டத்துக்குச் செல்லவில்லை. மூன்றாவது கட்டம் என்பது சமூகத்துக்குப் பரவுவதாகும். அதை நாம் எட்டிவிடமாட்டோம்  என்று நம்புகிறேன்.

சர்வதேச எல்லைகளை மூடுவது, அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்து சமூகப் பரவலைத் தடுக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.

Next Story