டிஷா கொலை வழக்கை போல மீண்டும் ஒரு சம்பவம்: தெலுங்கானாவில் பரபரப்பு


டிஷா கொலை வழக்கை போல மீண்டும் ஒரு சம்பவம்: தெலுங்கானாவில் பரபரப்பு
x
தினத்தந்தி 18 March 2020 9:42 AM GMT (Updated: 18 March 2020 9:42 AM GMT)

தெலுங்கானாவில் டிஷா கொலை வழக்கை போல மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் டிஷா பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக கொன்று எரிக்கப்பட்டார்.  இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது அதே பாணியில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 

அதுவும் டிஷாவை கொன்றது போலவே இப்போது ஒரு பெண்ணை கொடூரமாக கொன்று வீசியிருக்கிறார்கள். ரங்காரெட்டி மாவட்டம் தங்கடபள்ளியில் உள்ள ஒரு மேம்பாலத்திற்கு கீழ் ஆடையின்றி ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆடையின்றி கிடந்த பெண்ணின் சடலத்தையும், முகம் சிதைந்த நிலையில் கிடந்த கோலத்தை பார்த்தும் அதிர்ச்சியடைந்தனர்.  முகம் சிதைந்திருப்பதாலும் அவர் யார்? என்பதை கண்டறிய முடியாத குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

டிஷா கொலை வழக்கு அதிர்ச்சியில் இருந்து மீண்டு வராத சூழலில் இப்போது மீண்டும் அதே பாணியிலான ஒரு கொலை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  அதேநேரம் பெண்ணை கடத்தி வந்து கொன்ற கொலையாளிகளை கண்டறிய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து வரும் போலீசார், கொலையான பெண் யார்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

என்கவுண்ட்டர் நடந்த பிறகும் மீண்டும் ஒரு சம்பவம் அதே பாணியில் அரங்கேறியிருப்பதால் தெலுங்கானா மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

Next Story