கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: மத்திய அரசின் சுய ஊரடங்கு உத்தரவை மாநில அரசு முழுமையாக ஆதரிக்கும் - பினராயி விஜயன்
கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் மராட்டியம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது. இதில் 191 இந்தியர்களும், வெளிநாட்டவர் 32 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் கேரளா மாநிலம் சிறந்த சுகாதார அமைப்புகளில் ஒன்றாகும், மேலும் 2018 - 2019 ஆம் ஆண்டில் இங்கு நிபா வைரஸ் பரவிய போது 17 இறப்புகள் பதிவாகியது. இருந்தும் கொடிய நிபா வைரஸை எதிர்த்து சமாளித்ததற்காக பாராட்டுக்களைப் பெற்றது.
இந்தியாவிலேயே முதல் மூன்று கொரோனா வைரஸ் வழக்குகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேரளாவில் பதிவானது. இதை தொடர்ந்து சமூக விலகல் நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தியுள்ளதுடன், மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தியது. பொது இடங்களான மால்கள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்டது முதல் மாநிலம் கேரளா என்றாலும், அதன் பரவலைக் சிறப்பாக கட்டுப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் என்றும், இதனையடுத்து கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது என்று அம்மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை மறுநாள் 22-ம் தேதி மத்திய அரசின் சுய ஊரடங்கு உத்தரவை மாநில அரசு முழுமையாக ஆதரிக்கும். மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் பிற பேருந்துகள் மாநிலம் முழுவது ஓடாது. மெட்ரோவும் இயங்காது. 22-ம் தேதி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story