கேரளாவில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு


கேரளாவில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 23 March 2020 3:31 PM GMT (Updated: 23 March 2020 3:31 PM GMT)

கேரளாவில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

காசர்கோடு,

சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது.  தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  இதுவரை உலக அளவில் 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.  3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனா தவிர்த்து, இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக சீனாவின் உகான் நகரில் இருந்து நாடு திரும்பிய கேரளவாசிகள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனால் கேரளாவில் பேரிடர் என அறிவிக்கப்பட்டது.  அவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.  பின்னர் பேரிடர் தளர்த்தப்பட்டது.

தொடர்ந்து நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது.  இதனால் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்ந்து உள்ளது.

கேரளாவில் கலமசேரி பகுதியில் உள்ள எர்ணாகுளம் மருத்துவ கல்லூரியானது வைரஸ் சிகிச்சை மையம் ஆக தயார் செய்யப்பட்டு உள்ளது.

கேரளாவில் இதுவரை 23 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.  அவர்கள் தனி வார்டுகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  3,961 பேர் வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் ஒரே நாளில் இன்று 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவர்களில் 25 பேர் வளைகுடா நாடுகளுக்கு சென்று விட்டு இந்தியா திரும்பியவர்கள் ஆவார்கள்.

அவர்களில், கேரளாவின் காசர்கோட்டை சேர்ந்த 19 பேர் மற்றும் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் அடங்குவர்.

இதுதவிர எர்ணாகுளத்தில் 2 பேர், பத்தனம்திட்டா மற்றும் திருச்சூரில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Next Story