மத்திய பிரதேச முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றார்


மத்திய பிரதேச முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றார்
x
தினத்தந்தி 23 March 2020 4:35 PM GMT (Updated: 23 March 2020 4:35 PM GMT)

மத்திய பிரதேச முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் இன்று பதவியேற்று கொண்டார்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் தங்கள் ராஜினாமா கடிதங்களை கவர்னருக்கு அளித்ததை தொடர்ந்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனையடுத்து, சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 10 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் மத்தியபிரதேச முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் லால்ஜி டாண்டனிடம் கமல்நாத் வழங்கினார். 

இதனை அடுத்து பா.ஜ.க. சார்பில் ஆட்சியமைப்பது என முடிவு செய்யப்பட்டது.  இதற்காக அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் இன்று நடந்தது.  இந்த கூட்டத்தின் முடிவில், மத்திய பிரதேச முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் இன்று பதவியேற்க கூடும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள ராஜ்பவனில் இன்றிரவு முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்று கொண்டார்.  அவருக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

Next Story