தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை உலக அளவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் 21 நாட்கள் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story