கொரோனா பரவுவதை தடுக்க பத்திரிகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்


கொரோனா பரவுவதை தடுக்க பத்திரிகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 March 2020 11:30 PM GMT (Updated: 24 March 2020 10:15 PM GMT)

கொரோனா பரவுவதை தடுக்க பத்திரிகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பத்திரிகை அதிபர்களுடன் நடந்த காணொலி கலந்துரையாடலில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திரமோடி பத்திரிகை அதிபர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது கொரோனா பரவுவதை தடுக்க பத்திரிகைகளின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்றும், தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் நரேந்திரமோடி நேற்று நாடு முழுவதும் உள்ள பத்திரிகை அதிபர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார். மொத்தம் 11 மொழிகளைச் சேர்ந்த தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகை அதிபர்கள் 14 இடங்களில் இருந்து இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இந்த கலந்துரையாடலின்போது பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:-

செய்திகளை நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் பரப்பும் அளப்பரிய பங்களிப்பை ஊடகங்கள் செய்து வருகிறது. ஊடக கட்டமைப்பு இந்தியா முழுவதும் நகரங்களிலும், கிராமங்களிலும் பரவியுள்ளது. இந்தக் கட்டமைப்பு, ஊடகங்கள் சரியான தகவலை சிறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று, சவாலுக்கு எதிரான போராட்டத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது.

செய்தித்தாள்கள் பெரும் நம்பகத்தன்மையை கொண்டுள்ளன. ஒவ்வொரு பத்திரிகையின் உள்ளூர் பக்கம் ஏராளமானவர்களால் அதிகமாக வாசிக்கப்படுகிறது. எனவே, இந்தப் பக்கத்தில் வெளியாகும் கொரோனா வைரஸ் பற்றிய கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு பரப்பப்படுவது அவசியமாகிறது. பரிசோதனை மையங்கள் எங்கு உள்ளன? அங்கு யார் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்? யாரை அணுக வேண்டும்? வீட்டில் எப்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும்? என்ற தகவல்களை அறிவிப்பது அவசியமாகும்.

இந்த தகவல்கள் செய்தி தாள்களிலும், அவற்றின் இணையதள பக்கங்களிலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். ஊரடங்கு, தடை உத்தரவு போன்ற சமயங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் உள்ளூர் பக்கங்களில் இடம்பெற வேண்டும்.

ஊடகங்கள் மக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர்பு பாலமாக செயல்பட்டு, தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் தொடர்ச்சியான தகவல்களைத் தரவேண்டும். சமூக இடைவெளியின் முக்கியத்துவம் மிகமிக அவசியம். இதுபற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்தி, மாநில அரசுகளின் ஊரடங்கு, அடைப்பு உத்தரவுகள் பற்றிய தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் வைரஸ் பரவுவதால் ஏற்படும் பாதிப்புகளை சர்வதேச தரவுகள், பிற நாடுகளின் ஆராய்ச்சிகள் பற்றியும் செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும். தற்போது தொற்றுக்கு எதிரான மக்களின் போராட்ட உணர்வு அதிகரிக்க வேண்டியது அவசியம். அவநம்பிக்கை, எதிர்மறை தகவல்கள் பரவுவதை சமாளிப்பது அவசியம். “கொவிட்-19” தாக்கத்தை முறியடிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரதமர் தமது எண்ணங்களை திறம்பட வெளிப்படுத்தி நாட்டை முன்னணியில் வழிநடத்திச் செல்வதாக பத்திரிகை அதிபர்கள் மற்றும் அதனுடன் தொடர்புள்ளவர்கள் பாராட்டினர். ஊக்கம் ஏற்படுத்தும் வகையிலான நேர்மறையான செய்திகளை வெளியிட வேண்டும் என்ற பிரதமரின் யோசனைகளை செயல்படுத்த பாடுபடுவோம் என பத்திரிகை அதிபர்கள் உறுதியளித்தனர்.

மேலும் பிரதமர் பத்திரிகை மீது நம்பிக்கை வைத்துள்ளதற்காக அவருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். “இந்த தீவிரமான சவாலை ஒன்று சேர்ந்து சமாளிக்க வேண்டும்” என்ற பிரதமரின் அறைகூவலை நாடு முழுவதும் பின்பற்றுவதாக பத்திரிகை அதிபர்கள் கூறினார்கள்.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற பத்திரிகை அதிபர்கள் அளித்த தகவல்களுக்கு பிரதமர் மோடி நன்றி கூறினார். அப்போது அவர் “கடைகோடி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக பொறுப்புணர்வை மறக்கக்கூடாது. நமது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது கட்டாயம்” எனக் கூறினார்.

அரசின் தீவிரக் கண்காணிப்பு, நடவடிக்கை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து, பீதி பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளுக்காக பத்திரிகை அதிபர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் நன்றி தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, “இந்த நெருக்கடியான சூழலில் தவறான தகவல்கள் பரவுவதை பத்திரிகைகள் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒளிபரப்பு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார்.


Next Story