மே மாதத்துக்குள் இந்தியாவில் 13 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு - சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை


மே மாதத்துக்குள் இந்தியாவில் 13 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு - சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 March 2020 11:30 PM GMT (Updated: 26 March 2020 11:36 PM GMT)

இந்தியாவில் மே மாதத்துக்குள் 13 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

புதுடெல்லி, 

உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் தற்போது சுமார் 700 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி வரை இந்தியாவில் வைரஸ் பரவலின் வேகம் தொடர்பான தரவுகளை வைத்து சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதன் முடிவில், ‘இந்தியாவில் வைரஸ் தொற்றின் வேகம் இதே வேகத்தில் இருந்தால், மே மாத இடைப்பகுதிக்குள் இந்தியாவில் 1 முதல் 13 லட்சம் வரையிலான நபர்கள் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு உள்ளது’ என கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தற்போதைய நிலையில் இந்தியாவில் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் குறைவு. பரவலான பரிசோதனை குறைவு காரணமாக சமூக பரவலை கணிக்க முடியவில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்தியாவில் மருத்துவமனைகள், சுகாதார மையங்களுக்கு வெளியே எத்தனை பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது என மதிப்பிட முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் அமெரிக்கா, இத்தாலியை ஒப்பிடும்போது தொடக்க நிலையில் வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக விளங்கியதாகவும், ஆனாலும் வைரஸ் பரவல் தீவிரமடைவதற்கு முன் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story