கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை


கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 29 March 2020 7:08 AM GMT (Updated: 29 March 2020 7:18 AM GMT)

கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து குமரி மாவட்டம் திரும்பியவர்களில் கொரோனா அறிகுறி எதுவும் இல்லாத நிலையிலும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிலவற்றிலும் கொரோனா தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தனி வார்டுகள் ஏற்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான். இவருக்கு வயது 66. இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் ஊர் திரும்பியுள்ளார். இதனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வந்தது. அவர் நேற்று திடீரென உயிரிழந்தார். மேலும் முட்டம் பகுதியை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை மற்றும் திருவட்டர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் 24 ஆகியோரும் நேற்று உயிரிழந்தனர்.

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 3 பேர் ஒரே நாளில் இறந்த சம்பவம் குமரி மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை, உயிரிழந்த மூவரின்  ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. பரிசோதனையின் முடிவில் மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

Next Story