கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன


கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன
x
தினத்தந்தி 29 March 2020 12:29 PM GMT (Updated: 29 March 2020 12:29 PM GMT)

கடந்த 24 மணி நேரத்தில், 106 புதிய பாதிப்புகள் மற்றும் 6 இறப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறி உள்ளார்.

புதுடெல்லி: 

கொரானா பாதிப்பு எண்ணிக்கை 1039 ஆக உயர்ந்து உள்ளது. இன்று கடந்த 16 மணி நேரத்தில்  61 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக  என்று சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்புக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். 87 பேர் குணமாகி விடு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 106 புதிய பாதிப்புகள் மற்றும் 6 இறப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறி உள்ளார்.

மேற்கு வங்காளம், தெலுங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா, ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த மாநிலங்களில் இருந்து ஒவ்வொன்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. மராட்டியத்தில் 6, மத்தியப் பிரதேசம் 2, கர்நாடகா 3, குஜராத் 4, டெல்லி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

 மராட்டியத்தில்186 பேர்  அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகவும், அடுத்து கேரளாவில் 182 பாதிப்புகளும் உள்ளன.

கடந்த வாரம் 21 நாள் ஊரடங்கை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கட்டுப்பாடுகளை மீறுவதாக இன்று எச்சரித்தார், அவ்வாறு செய்பவர்கள் "தங்கள் சொந்த வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்" என்று கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்பியதன் பின்னணியில் ஊரடங்கு  முடிவுக்கு பிரதமரும் மன்னிப்பு கேட்டார்,

"உங்கள் வாழ்க்கையில் சிரமங்களை ஏற்படுத்திய இந்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், குறிப்பாக ஏழை மக்கள். உங்களில் சிலர் என் மீது கோபப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த போரில் வெற்றி பெற இந்த கடுமையான நடவடிக்கைகள் தேவை" என்று இன்று தனது மாதாந்திர வானொலி உரையான "மான் கி பாத்" உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார் .

டெல்லியில் உள்ள பல மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையங்கள் அதிக நெரிசலான பகுதிகளாக மாறியுள்ளது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சிறப்புப் பேருந்துகளில் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள சொந்த ஊர்களுக்குத் திரும்பும் தொழிலாளர்களுக்கு அரசு நடத்தும் முகாம்களில் 14 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில், கடந்த சில நாட்களாக மாநிலத்திற்கு திரும்பிய 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை கண்டுபிடித்து, அவர்களை அரசு நடத்தும் முகாம்களில் தனிமைப்படுத்தவும், அவர்களின் உணவு மற்றும் பிற அன்றாட தேவைகளுக்கான ஏற்பாடுகளை உறுதி செய்யவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் டெல்லி உட்பட 90 க்கும் மேற்பட்ட நகரங்களில் காற்று மாசுபாடு குறைந்து உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தாக்கம் டெல்லியில் பி.எம் .2.5 (நுண் துகள்கள் மாசுபடுத்தும்) 30 சதவீதம் குறைந்துள்ளது. அகமதாபாத் மற்றும் புனேவில் 15 சதவீதம் குறைந்து உள்ளது.

Next Story