கேரளாவில் மது விற்பனைக்கு முதல் மந்திரி அனுமதி


கேரளாவில் மது விற்பனைக்கு முதல் மந்திரி அனுமதி
x
தினத்தந்தி 30 March 2020 11:41 AM GMT (Updated: 30 March 2020 11:41 AM GMT)

கேரளாவில் மது விற்பனைக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் அனுமதியளித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மத்திய அரசு கடந்த 24ந்தேதி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவானது ஏப்ரல் 14ந்தேதி வரை அமலில் இருக்கும்.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,100ஐ கடந்து உள்ளது.  பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது.  மராட்டியம், கேரளா மற்றும் டெல்லியில் அதிக அளவில் பாதிப்பு எண்ணிக்கை உள்ளதுடன் தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் மந்திரி பினராயி விஜயன், கடந்த 24ந்தேதி ஊரடங்கு உத்தரவு அமலான பின்னர், மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.  இதனால் பல்வேறு பகுதிகளில் தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

எனவே, கேரளாவில் மதுவிற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி மதுபானம் வழங்க, கலால் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.  மதுபானம் கிடைக்காதது சமூக பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

இதேபோன்று மதுவிற்கு அடிமையான நபர்களை, சிறப்பு மையங்களில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Next Story