கொரோனா அச்சம்; சேனிட்டைசரை தவறாக பயன்படுத்திய நபர் மருத்துவமனையில் அனுமதி


கொரோனா அச்சம்; சேனிட்டைசரை தவறாக பயன்படுத்திய நபர் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 30 March 2020 2:12 PM GMT (Updated: 30 March 2020 2:12 PM GMT)

கொரோனா அச்சத்தில் சேனிட்டைசரை தவறாக பயன்படுத்தியதில் தீக்காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,100ஐ கடந்து உள்ளது.  பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது.  மராட்டியம், கேரளா மற்றும் டெல்லியில் அதிக அளவில் பாதிக்கப்பட்டோர் உள்ளதுடன் தொடர்ந்து எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது.  இதனால் வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  இதனை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ளது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.  இதன்படி, கைகளை தூய்மைப்படுத்த உதவும் வகையில் ஹேண்ட் சேனிட்டைசர்கள் உள்ளன.  இதில் ஆல்கஹால் அளவு அதிகம் சேர்க்கப்படுகிறது.  இதனால் வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.  எனினும், இதனை பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை துறையின் தலைவராக இருப்பவர் டாக்டர்.மகேஷ் மங்கள்.  இவர் கூறும்பொழுது, அரியானாவின் ரேவரி நகரை சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் 35 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.  அவர் சேனிட்டைசரை தனது ஆடையில் தெளித்துள்ளார்.  அவர் அதனை பயன்படுத்தும்பொழுது அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் இருந்து உள்ளது.

இதனால் தீப்பற்றி கொண்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.  சிகிச்சைக்கு பின்பு அவர் நலமுடன் உள்ளார்.

நாம் பயன்படுத்தும் சேனிட்டைசர்கள் 62 சதவீத அளவுக்கு ஆல்கஹால் இருக்கும்பொழுது, அது எளிதில் தீப்பிடிக்கும் ஆபத்து நிறைந்தது.  அதனால் நெருப்பின் அருகேயோ அல்லது வெப்ப பகுதியிலேயோ சேனிட்டைசர்களை பயன்படுத்த வேண்டாம்.  அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  தேவையான அளவுக்கே எடுத்து பயன்படுத்தி, அதனை நன்றாக உலர விடவேண்டும் என கூறியுள்ளார்.

Next Story