கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 20 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றம் - ரெயில்வே நடவடிக்கை


கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 20 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றம் - ரெயில்வே நடவடிக்கை
x
தினத்தந்தி 30 March 2020 11:45 PM GMT (Updated: 31 March 2020 12:04 AM GMT)

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 20 ஆயிரம் ரெயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1100-ஐ எட்டுகிறது. ஒரே நாளில் 90-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் கொரோனா வைரஸ் இப்படி வேகமாக பரவுகிறபோது, பாதிப்புக்கு ஆளானோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க போதுமான அளவுக்கு இட வசதி தேவைப்படுகிறது.

இதை சமாளிப்பதற்காக ரெயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது.

இதையொட்டி ரெயில்வே வாரியம், எல்லா மண்டல பொது மேலாளர்களுக்கும் அவசர கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 20 ஆயிரம் ரெயில்பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றி அமைக்கும் தேவை ஏற்படும். முதலில் தனிமைப்படுத்தி வைக்கவும், சிகிச்சை அளிக்கவும் 5 ஆயிரம் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற வேண்டும்.

* இதற்காக குளிர்சாதன வசதியில்லாத, படுக்கை வசதி கொண்ட ரெயில்பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* அதில் இந்திய பாணி கழிவறையை குளியலறையாக மாற்ற வேண்டும். அதற்கான வடிவமைப்பு செய்ய வேண்டும். வாளி, குவளை, சோப்பு பெட்டி உள்ளிட்டவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இது போன்ற பல தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இப்படி ரெயில்பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றுவது தொடர்பாக ரெயில்வே வாரியமானது முன்கூட்டியே, ஆயுதப்படை மருத்துவ பணிகள், பல்வேறு மண்டல ரெயில்வே மருத்துவ துறைகள், ஆயுஷ்மான் பாரத் திட்ட நிர்வாகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

Next Story