கொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் ஒரு குட்டி ஜோதிடரின் கணிப்பு


கொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் ஒரு குட்டி ஜோதிடரின் கணிப்பு
x
தினத்தந்தி 4 April 2020 8:42 AM GMT (Updated: 4 April 2020 8:42 AM GMT)

கொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் ஒரு குட்டி ஜோதிடர் அபிக்யா ஆனந்த் என்பவர் கணித்து உள்ளார்.

பெங்களூரு

கொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸை 2019-ம் ஆண்டில் ஆகஸ்டிலேயே கணித்து கூறியவர்.

இவரது பெயர், அபிக்யா ஆனந்த். கர்நாடகாவைச் சேர்ந்தவர். பிறந்தது, 2006-ம் ஆண்டு.

இவரது தந்தை ஆனந்த் ராமசுப்ரமணியன். தாய் அனு ஆனந்த். ஆன்மிகத்தில் அதிக நாட்டமுள்ள அபிக்யா, சிறுவயதிலிருந்தே அது சார்பான பல படிப்புகளை ஆர்வமாக படித்தார்.

வேதங்களை கற்று உணர்ந்தவர். இதிகாசங்களையும் ஆர்வமாக படித்து வருகிறார்.இவர் 2015-ம் ஆண்டில் இருந்து ‘மனசாட்சி’ என்ற யூ-டியூப் சேனலை உருவாக்கி நிர்வகித்து வருகிறார்.

அதில் கிரகப்பெயர்ச்சி, ராசி பலன், ஜோதிட விஷயங்களை ஆதாரப்பூர்வமாக பேசுவது, அபிக்யாவின் ஸ்டைல்.

அப்படித்தான், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட்ட வீடியோவில், 2020-ம் ஆண்டின் கிரக நிலைகளையும், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளையும் விளக்கி இருந்தார்.

 ஒரு தொற்று நோய் பரவப் போகிறது என்றும் உலகில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 வரை நிலைமை மோசமடையும் என்றும் அவர் கூறினார். ஆந்திரா, ஒரிசா போன்ற இந்திய மாநிலங்கள் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் அதிக தாக்கத்தை எதிர்கொள்ளும். மே 29 முதல் நிலைமை சிறப்பாக வரத் தொடங்கும் என்றும் அவர் கணித்தார்.

கொரோனா பற்றியும் அந்த வீடியோவில் சொல்லப்பட்டிருந்தது. கொரோனா வைரஸோடு சேர்த்து, உலக பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கும் என முன்பே கணித்து கூறி இருந்தார்.

இந்த குட்டி ஜோதிடருக்கு பல பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்திருக்கின்றன. 2015-ம் ஆண்டு பகவத் கீதா விருதும், 2016-ம் ஆண்டு ஸ்லோகா பிரவீனா விருதும், ஸ்பந்தன்ஸ்ரீ விருதும் கிடைத்தது. தற்போது டிரெண்டிங்கில் இருக்கும், இந்த குட்டி ஜோதிடரின் யூ-டியூப் சேனலை இன்று ஏராளமானோர் பின்பற்ற தொடங்கி உள்ளனர்.




Next Story