கொரோனா பாதிப்பு: சர்வதேச நாடுகளில் 70% ஹைட்ரோகுளோரோகுயின் தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது


கொரோனா பாதிப்பு: சர்வதேச நாடுகளில் 70% ஹைட்ரோகுளோரோகுயின் தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது
x
தினத்தந்தி 9 April 2020 6:09 AM GMT (Updated: 9 April 2020 6:09 AM GMT)

சர்வதேச நாடுகளில் 70 சதவீத ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் தேவையை இந்தியா பூர்த்தி செய்வதாக இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுதர்சன் ஜெயின் தெரிவித்துள்ளார்.


புதுடெல்லி

ஹைட்ராக்சிகுளோராகுயின் உள்ளிட்ட மருந்துப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விலக்கிக்கொண்டது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, அமெரிக்காவுக்கு, இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்திருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் தயாரிப்பில் இந்தியா சர்வதேச அளவில் முன்னணி இடம் வகிக்கிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து முக்கியபங்காற்றுவதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் 1,500 பேரிடம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்காவில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். 398,785 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 138,836 பேர் நியூயார்க் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின், மலேரியாவை குணப்படுத்தும் மருந்து தானே என்று அனைவரும் கேட்கிறீர்கள். இதன்மூலம், கொரோனா பாதிப்பை சரிசெய்ய முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், கொரோனாவால் ஏற்படும் மரணத்தில் இருந்து காக்க இந்த மருந்து உதவுவதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளில் 70 சதவீத ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் தேவையை இந்தியா பூர்த்தி செய்வதாக இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுதர்சன் ஜெயின் தெரிவித்துள்ளார்.

ஆனால் உள்நாட்டில் அதிகம் தேவைப்படும் நிலையில் ஏற்றுமதி செய்வது தவறு எனச் சிலர் விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் போதிய அளவில் இருப்புள்ளதாகவும், தட்டுப்பாடு இல்லை எனவும் கேரளம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story