தெலுங்கானாவில் ஏப்ரல் -30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் அறிவிப்பு


தெலுங்கானாவில் ஏப்ரல் -30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 April 2020 4:19 PM GMT (Updated: 11 April 2020 4:19 PM GMT)

தெலுங்கானாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் அறிவித்துள்ளார்.

ஐதராபாத்,

கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவல் 2-வது கட்டத்தில் இருந்து இன்னும் 3-வது கட்டத்துக்கு செல்லவில்லை. 3-வது கட்டத்துக்கு சென்றுவிட்டால் கொரோனா பரவும் வேகமும் உயிரிழப்புகளும் வேகமாக அதிகரிக்கும். அப்படி ஒரு நிலைக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் கவனமாக உள்ளன.

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு வரும் 14 ஆம் தேதியோடு முடிவுக்கு வர உள்ளது. ஆனாலும், கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத்தெரிகிறது.  

இதற்கிடையே,  ஒடிசா, பஞ்சாப், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.  இந்த நிலையில், தெலுங்கானாவிலும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர்ராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானாவில் தற்போதைய நிலவரப்படி, 503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 96 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story