இந்தியாவில் ஜூன், ஜூலை மாதத்தில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் - எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர்


இந்தியாவில் ஜூன், ஜூலை மாதத்தில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் - எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர்
x
தினத்தந்தி 7 May 2020 1:19 PM GMT (Updated: 7 May 2020 3:11 PM GMT)

இந்தியாவில் ஜூன், ஜூலை மாதத்தில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. 

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 52,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 1,783 பேர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்து 267 பேர் குணமடைந்தும், 35,902 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஜூன், ஜூலை மாதத்தில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவில் தற்போது வெளியாகும் தரவுகள் மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் விகிதத்தை வைத்து பார்த்தால், ஜூன், ஜூலை மாதங்களில் இந்த தொற்று உச்சகட்டத்தை அடையும் வாய்ப்பு உள்ளது. ஊரடங்கை நீட்டிப்பதால் இதில் ஏதேனும் மாற்றமும் இருக்கலாம். சில காலம் பொறுத்துதான் இதன் தாக்கம் தெரியவரும்” என்று தெரிவித்தார். 


Next Story