கொரோனா சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகள் தயார்: ரயில்வே துறை


கொரோனா சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகள் தயார்: ரயில்வே துறை
x
தினத்தந்தி 7 May 2020 2:34 PM GMT (Updated: 7 May 2020 2:34 PM GMT)

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,  

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், இந்திய அரசின் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் வகையில், இந்திய ரயில்வே பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. 

இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது

இந்திய ரயில்வே தனது 5,231 பயணிகள் ரயில் பெட்டிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றியுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் படி இந்த கொரோனா பராமரிப்பு மையங்களில் மிதமான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள்.

மேலும் இந்த ரயில் பெட்டிகள் மாநில அரசுகளின் மருத்துவ வசதிகள் முழுவதும் பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில் உள்ள பகுதிகளில், கூடுதல் வசதியாகப் பயன்படுத்தப்படும். இந்த ரயில் பெட்டிகளால் சந்தேகப்படும் கொரோனா நோயாளிகள் மற்றும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்கும் வசதிகள் அதிகரிக்கும். மண்டல ரயில்வேக்கள் இந்த ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்தி வைக்கும் மையங்களாக உருமாற்றி உள்ளன.

215 ரயில் நிலையங்களில் உள்ள தனிமைப்படுத்தி வைக்கும் மையங்களில், 85 நிலையங்களுக்கு மட்டுமே சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை ரயில்வே செய்து தரும். மீதி உள்ள 130 ரயில் நிலையங்களுக்கு மாநில அரசுகள் சுகாதாரப் பணியாளர்களையும், அத்தியாவசிய மருந்துகளையும் வழங்குவதாக ஒத்துக் கொண்டு வேண்டுகோள் விடுத்தால், அவர்களுக்கு கொரோனா பராமரிப்பு ரயில் பெட்டிகள் ஒதுக்கித் தரப்படும். ரயில்வே இந்த கொரோனா பராமரிப்பு ரயில் பெட்டி மையங்களுக்காக 158 ரயில் நிலையங்களில் தண்ணீர் வசதி மற்றும் மின்னேற்ற வசதிகளை தயார் நிலையில் வைத்துள்ளது. 58 ரயில் நிலையங்களில் தண்ணீர் வசதி மட்டும் உள்ளது.

Next Story