நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு


நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 May 2020 9:30 PM GMT (Updated: 14 May 2020 7:26 PM GMT)

கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிக்கிறது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச்சென்று விட்டார். கடந்த ஆண்டு அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும், இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கை அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில், நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சிப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் காணொலி காட்சி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மும்பை ஐகோர்ட்டு மற்றும் அலகாபாத் ஐகோர்ட்டுகளின் முன்னாள் நீதிபதி அபய் திப்சே, கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். ராகுல் காந்தி, அசோக் கெலாட், அசோக் சவான் ஆகியோரை சந்தித்து பேசினார்.

முன்னாள் நீதிபதி அபய் திப்சே, நிரவ் மோடி தரப்பு சாட்சியாக சாட்சியம் அளித்துள்ளார். அதில், நிரவ் மோடிக்கு எதிரான மோசடி மற்றும் குற்றச்சதி குற்றச்சாட்டுகள், இந்திய சட்டத்தின் முன்பு நிற்காது என்று அவர் கூறியுள்ளார். அவரது வாக்குமூலத்துக்கு இந்திய விசாரணை அமைப்புகள் உறுதியான பதிலை அளிக்கும்.

அபய் திப்சே, தனிப்பட்ட முறையில் செயல்பட்டதாக கூற முடியாது. அவர் காங்கிரசின் கட்டளைப்படியே செயல்பட்டுள்ளார்.

சந்தேகத்துக்குரிய சூழ்நிலைகளை பார்க்கும்போது, நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிப்பதாக எளிதில் ஊகிக்க முடியும். எதிர்க்கட்சியின் முகமூடியை கிழிப்பதாக இவை உள்ளன.

நிரவ் மோடி, பா.ஜனதா ஆட்சியின்போது தப்பி ஓடியிருந்தாலும், அவரது பெரும்பாலான குற்றங்கள் காங்கிரஸ் ஆட்சியுடன் தொடர்புடையவை.

இருப்பினும், நிரவ் மோடியின் சொத்துகளை மோடி அரசு முடக்கி, ஏலம் விட்டுள்ளது. அவரை இந்தியாவுக்கு கொண்டுவர முயன்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story