ஊரடங்கில் அடைக்கலம் கொடுத்த நண்பரின் மனைவி - குழந்தைகளுடன் ஓட்டம் பிடித்த நண்பன்


ஊரடங்கில் அடைக்கலம் கொடுத்த நண்பரின் மனைவி - குழந்தைகளுடன் ஓட்டம் பிடித்த நண்பன்
x
தினத்தந்தி 22 May 2020 8:39 AM GMT (Updated: 22 May 2020 8:39 AM GMT)

ஊரடங்கு காரணமாக, நண்பனுக்கு வீட்டில் இடம் கொடுத்த நிலையில், அந்த இளைஞன் நண்பனின் மனைவியுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி

உலகெங்கிலும் கொடிய கொரோனா வைரஸ் லட்சகணக்கானவர்களை கொன்று குவித்து உள்ளது.  திருமண உறவுகளிலும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு நபர் ஊரடங்கு நேரத்தில் நண்பருக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்யப் போக, தற்போது அந்த நண்பர் மனைவி குழந்தைகளை இழந்து  நிற்கும் சம்பவம் நடந்து உள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறை சேர்ந்தவர் லோதாரியோ( வயது 32) எர்ணாகுளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர், ஊரடங்கை தொடர்ந்து முவாட்டுபுழா நகரில் சிக்கிக்கொண்டார். திடீரென ஊரடங்கு காரணமாக  தங்குவதற்கு இடமும் இன்றி சாப்பாடும் இன்றி தவித்துள்ளார்.இதனால், எர்ணாகுளத்தில் தனது பால்யகால நண்பர் ஒருவர் இருப்பதை கேள்விப்பட்டு அவருடைய உறவினர்களிடம் போன் செய்து நண்பரின் தொலைபேசி எண்ணை வாங்கி உள்ளார்.

அதன்பிறகு நண்பருக்கு போன் செய்து தான் ஊரடங்கு காரணமாக கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதாகவும் தனக்கு உதவி செய்யும்படியும் கெஞ்சி கேட்க, அவரும் நண்பனின் நிலையை கண்டு வேதனையடைந்து, அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு தங்குவதற்கு இடம் மற்றும் சாப்பாடு என தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அவர் தனது நண்பரை வீட்டில் வைத்து தங்க வைத்துள்ளார்.சமீபத்தில் மூணாறு பகுதி பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டதால், நண்பர் அந்த இளைஞரிடம் வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். ஆனால்  தொடர்ந்து அவர் நண்பரின் வீட்டிலேயே தங்கியிருந்தது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த 
நிலையில் திடீரென ஒருநாள் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் அவரது நண்பர் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.  போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அந்த பெண் தனது புதிய காதலருடன் தான் செல்வேன் என்றும், குழந்தைகளும் தன்னுடன் தான் இருப்பார்கள் என்றும் கூறினார். போலீசார் எவ்வளவோ அறிவுரை கூறியும் அந்த பெண் கேட்காமல் காதலனுடன் சென்று விட்டார்.

மேலும் அந்த பெண் தனது பெயரில் தனது கணவர் வாங்கி கொடுத்த காரையும் தன்னுடைய  நகைகளையும் எடுத்துக்கொண்டு காதலருடன் குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.இது போல் ஏற்கனவே இரண்டுமுறை அந்த பெண் திடீர் காதலனுடன் ஓடிபோனதாகவும் போலீசார் தலையிட்டு சேர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. 

Next Story