தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்


தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்
x
தினத்தந்தி 23 May 2020 4:32 AM GMT (Updated: 23 May 2020 12:48 PM GMT)

காயமுற்ற தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை அழகிய சாதனை என இவான்கா டிரம்ப் பாராட்டி உள்ளார்


புதுடெல்லி

அரியானாவின் குர்கோவான் நகரிலிருந்து காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து 15 வயதான சிறுமி ஜோதி குமாரி 1,200 கி.மீ  10 நாட்களில் சொந்த மாநிலமான பீகாருக்கு அழைத்து வந்து பிரமி்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்தவாரம் முழுவதும் சமூக வலைதளங்களில் இந்த சிறுமி தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து சொந்தமாநிலம் அழைத்து வந்தது டிரெண்டிங் ஆனது.

தற்போது இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு லாக்டவுன் முடிந்தபின் பயிற்சிக்கு அழைத்துள்ளது

ஜோதி குமாரி சைக்கிள் ஓட்டும் திறமை குறித்து அறிந்த தேசிய சைக்கிள் பந்தய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், லாக்டவுன் முடிந்தபின் அவரை டெல்லிக்கு பயிற்சிக்காக அழைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் மற்றும் ஆலோசகர் இவான்கா டிரம்ப் ஜோதி குமாரியின் செயலை பாராட்டி உள்ளார்.

சகிப்புத்தன்மை மற்றும் அன்பின் அழகான கால்களின் சாதனை இந்திய மக்களின் கற்பனையையும் சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பையும் ஈர்த்துள்ளது என இவ்வான்கா டிரம்ப் பாராட்டி உள்ளார்.

அவர் தனது டுவிட்டில் கூறி இருப்பதாவது: 

"15 வயது ஜோதி குமாரி, தனது காயமடைந்த தந்தையை 7 நாட்களில் +1,200 கி.மீ தூரம் தனது சைக்கிளின் பின்புறத்தில் வைத்து தங்கள் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார்.  சகிப்புத்தன்மை மற்றும் அன்பின் இந்த அழகான சாதனை இந்திய மக்களின் கற்பனையையும் சைக்கிள் கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது என கூறி உள்ளார்.

இவான்காவுக்கு பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா "ஜோதி 1,200 கி.மீ தூரம் பயணம் செய்ததைப் போல அவரது வறுமையும் விரக்தியும் மகிமைப்படுத்தப்படுகின்றன. அரசாங்கம் அவரிடம் தோல்வியுற்றது, இது ஒரு சாதனையாக எக்காளம் போடுவதற்கு ஒன்றும் இல்லை என கூறினார். 

Next Story