சீனாவின் தந்திரம் :ஒரே நேரத்தில் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தும் மூன்று நாடுகள்


சீனாவின் தந்திரம் :ஒரே நேரத்தில் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தும் மூன்று நாடுகள்
x
தினத்தந்தி 27 May 2020 12:37 PM GMT (Updated: 27 May 2020 12:37 PM GMT)

ஒரே நேரத்தில் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தும் மூன்று நாடுகள் விவகாரத்தில் பிரதமர் மோடி என்ன முடிவு எடுக்கப்போகிறார்...?

புதுடெல்லி

இமய மலைப்பகுதியில் பனி படர்ந்த இந்திய சீன எல்லை பகுதியில் போர்ப்பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்திய சீன எல்லை 3,488 கிலோ மீட்டர் நீண்டது. லடாக் பகுதியில் 38,000 சதுர கிலோ மீட்டர் பகுதியை 1962 ஆண்டு போரின் போது சீனா கைப்பற்றி வைத்திருக்கிறது. இதே போல சிக்கிமின் கிழக்கு பகுதியில் டோக்லாம் பகுதியை உரிமை கொண்டாடி வருகிறது. சமீப காலமாக அருணாச்சல பிரதேசத்தில் 90,000 சதுர கிலோ மீட்டர் பகுதி தங்களது ஆளுகைக்கு உட்பட்ட பகுதி எனவும் அங்கே இந்தியா கட்டுமானங்களை ஏற்படுத்தக்கூடாது என்றும் சீனா எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

லடாக் பகுதியில் தான் ஆக்கிரமித்துள்ள எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சுமார் 5000 வீரர்களையும், போர் தளவாடங்களையும் சீனா குவித்து வருகிறது. அதற்கு முன்பாகவே இந்திய பகுதியில் இந்தியா புதிய சாலை ஒன்றை அமைத்து வருகிறது. இதன் அருகில் ஆக்கிரமிப்பு லடாக் பகுதியில் பெரிய அளவில் ராணுவ பதுங்கு குழிகளையும் கட்டடங்களையும் சீனா கட்டி வருகிறது.

மே 5 மற்றும் 6 தேதிகளில் இந்திய எல்லையில் உள்ள பாங்ஓங் பகுதியில் புகுந்த சீன ராணுவ வீரர்களை. இந்திய படை வீரர்கள் அமைதியான வழியில் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது இந்தோ - திபெத் எல்லைக் காவல்துறை வீரர்களின் ஆயுதங்களை சீன மக்கள் ராணுவத்தினர் பறித்துக் கொண்டதாகவும் சிலரை தடுத்து வைத்துக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதே போல சிக்கிமின் நாகு லா பகுதியில் மே 10 அன்று இந்திய சீன படையினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரண்டு ராணுவ வீரர்களும் கற்களை வீசி தக்குதலில் ஈடுபட்டனர். சிலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் காஷ்மீர், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசத்தில் சீனாவும், காஷ்மீரில் பாகிஸ்தானும், உத்தரகாண்ட் எல்லையில் நேபாளமும் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன. இது சீனாவின் தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.

சீனா கிட்டத்தட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் - நிலத்திலும் கடலிலும் - கிட்டத்தட்ட அப்பட்டமாக நாடுகளின் இறையாண்மை உரிமைகள் குறித்து சிறிதும் அக்கறை காடடுவதில்லை.

இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு குறித்து சீனா கவலைப்படவில்லை. 

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்திய பிரதேசத்தில் சீனா ஒரு அணை கட்டி வருகிறது. பாகிஸ்தான் அரசாங்கத்துடன் ஒரு சீன நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பாகிஸ்தானால ஆக்கிரமிக்கப்பட்ட கில்கிட்-பால்டிஸ்தானில் தொழில்நுட்ப ரீதியாக இந்திய பிரதேசமாக இருக்கும் காஷ்மீரில் ஒரு அணை கட்ட 5.8 பில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவின் ஆட்சேபனைகளை மீறி சீனா பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்து வருகிறது.

லிபுலேக்கில் இருந்து மானசரோவருக்கு 80 கிலோ மீட்டர் நீளத்தில் இந்தியா சாலை அமைத்த போதும்  நேபாளம் ஆட்சேபனை எழுப்பியது.வடக்கு எல்லையில் இந்தியாவின் ஆதிக்கத்தை குறைக்க நினைக்கும் சீனாவின் விஷமம் இதன் பின்னணியில் இருப்பதாக நம்பப்படுகிறது.  

திபெத்தின் எல்லையில் உத்தரகண்ட் மாநிலத்தை லிபுலேக் உடன் இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள சாலையை இந்தியா திறந்ததைத் தொடர்ந்து நேபாளம் வரைபடத்தையும் அரசியலமைப்பையும் திருத்தம் செய்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தின் குறுக்கே இந்த சாலை நீண்டுள்ளது மற்றும் திபெத்தில் கைலாஷ் மன்சரோவர் செல்லும் இந்து யாத்ரீகர்களுக்கான பயணத்தை எளிதாக்குகிறது.

இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை தனக்கு சொந்தமானதாக குறிப்பிட்டு நேபாளம்  வரைபடம் வெளியிட்டு உள்ளது. புதிய வரைபடம் பள்ளி மற்றும் கல்லூரி உரை புத்தகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அச்சிடப்படும் என்றும் அனைத்து நிர்வாக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என்றும் நேபாளி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால் இரு நாட்டு தூதரக உறவுகளில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், சீனாவில் அத்துமீறல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைவர் விபின் ராவத், முப்படைகளின் தளபதி ஆகியோர் இதில் பங்கேற்றனர். சீனாவின் நடவடிக்கை தொடர்பாக தளபதிகள் விளக்கம் அளித்தனர். எல்லைப் பகுதியில் தற்போதுள்ள நிலையை தொடர இந்திய படையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story