தெலுங்கானா; 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி
தெலுங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலியானான்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் பொடிச்சன்பள்ளி கிராமத்தில் பாப்பன்னபேட்டை பகுதியில் விவசாய நிலத்தில் கோவர்த்தன் என்பவர் 120 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு ஒன்றை தோண்டி போட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.
திறந்தே கிடந்த அதன் அருகே விவசாயி மகன் சாய் வர்தன் (வயது 3) நின்று கொண்டு இருந்துள்ளான். திடீரென ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்துள்ளான். சம்பவம் நடந்தபொழுது கோவர்த்தனின் குடும்பத்தினரும் அங்கே இருந்துள்ளனர்.
இதன்பின்னர் தகவல் அறிந்து கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரெண்டு உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு குழி தோண்டி, 25 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணி நடந்தது. சிறுவனுக்கு உதவியாக பிராணவாயு செலுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், இந்த முயற்சியில் பலனின்றி சிறுவன் உயிரிழந்து விட்டான்.
Related Tags :
Next Story