மும்பையில் 5 அடுக்கு ஓட்டலில் தீ விபத்து; 24 மருத்துவர்கள் மீட்பு


மும்பையில் 5 அடுக்கு ஓட்டலில் தீ விபத்து; 24 மருத்துவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 28 May 2020 5:52 AM GMT (Updated: 28 May 2020 5:52 AM GMT)

மும்பையில் 5 அடுக்கு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 24 மருத்துவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அவசரகால மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பணியாளர்கள் தங்குவதற்காக தற்காலிக வசதிகளை மும்பை மாநகராட்சி செய்து உள்ளது.

இவர்களில் பலர் மும்பையிலுள்ள பல்வேறு ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  இதுபோன்று தெற்கு மும்பையில் மெட்ரோ சினிமா அருகே பார்ச்சூன் என்ற ஓட்டலிலும் பணியாளர்கள் பலர் தங்கியுள்ளனர்.  5 அடுக்குகளை கொண்ட இந்த ஓட்டலில், முதல் தளத்தில் இருந்து 3வது தளம் வரை திடீரென தீ மளமளவென பரவியது.

இதுபற்றி தகவல் அறிந்து 8 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்றனர்.  அவர்கள் கடுமையாக போராடி 3 மணிநேரத்திற்கு பின்னர் அதிகாலை 1.30 மணியளவில் தீயை அணைத்தனர்.

ஓட்டலில் தங்கியிருந்த 24 மருத்துவர்கள் மீட்கப்பட்டனர்.  இவர்கள் தவிர்த்து ஓட்டலில் 3 பேர் தங்கியிருந்து உள்ளனர்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடந்த ஏப்ரல் 21ந்தேதி மும்பை சென்டிரலில், கொரோனா சிகிச்சைக்காக தங்குபவர்கள் பயன்படுத்திய ரிப்பன் ஓட்டலின் விடுதி அறையில் தீ விபத்து ஏற்பட்டது.

Next Story