மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் தேவை- கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து பஞ்சாப் முதல்வர் கருத்து


மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் தேவை- கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து பஞ்சாப் முதல்வர் கருத்து
x
தினத்தந்தி 20 Jun 2020 5:40 PM GMT (Updated: 20 Jun 2020 5:40 PM GMT)

ஆயுதம் இல்லாமல் சென்று வீரர்கள் எல்லையில் உயிர் தியாகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அமிர்தசரஸ்,

சீனாவை ஒட்டியுள்ள லடாக் எல்லையில் இந்தியப் பகுதிக்குள் சாலை அமைக்கும் பணி கடந்த மே மாதத் தொடக்கத்தில் நடை பெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்றும், அங்கிருந்து இந்திய ராணுவப் படை வெளியேற வேண்டும் எனவும் கூறியது.

இவ்விவகாரம் தொடர்பாக  மோதல் நீடித்துக்கொண்டே இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.  சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதல் காரணமாக இந்தியா-சீனா இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. 
 
இதற்கிடையே, எல்லைகளில் உள்ள வீரர்கள் தங்கள் பாதுகாப்பிற்குத் துப்பாக்கிச்சூடு நடத்திக்கொள்ளும் வகையில் மத்திய அரசு கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறுகையில் ‘‘சீன எல்லையில் பணியாற்றும் நமது வீரர்கள் ஆயுதங்களை கையில் வைத்திருப்பதுடன், அதனை பயன்படுத்தவும் மத்திய அரசு அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு நமது கொள்கை முடிவுகள் மாற வேண்டும். ஆயுதம் இல்லாமல் சென்று வீரர்கள் எல்லையில் உயிர் தியாகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். 

Next Story