கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 58% ஆக உயர்வு; மத்திய சுகாதார மந்திரி
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 58% ஆக உயர்ந்து உள்ளது என மத்திய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் இடத்தில் மராட்டியமும், அதற்கு அடுத்த இடத்தில் தலைநகர் டெல்லியும் உள்ளன. டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று பலி எண்ணிக்கையும் டெல்லியில் உயர்ந்து உள்ளது. தொடர்ந்து பல மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது.
இதனை தொடர்ந்து மத்திய சுகாதார துறை மந்திரி டாக்டர் ஹர்ச வர்தன் தலைமையில் காணொலி காட்சி வழியே மந்திரிகள் குழுவினருடனான கூட்டம் இன்று நடந்தது. இதில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர், மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி ஹர்ச வர்தன், நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 58% ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 3 லட்சம் பேர் வரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு விகிதம் 3% என்ற அளவில் உள்ளது. இது மிக குறைவாகும். கொரோனா பாதிப்பு விகிதம் இரட்டிப்பு அடைவது 19 நாட்கள் வரை குறைந்து உள்ளது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story