மராட்டியத்தில் 1,000 கொரோனா மரணங்கள் மறைப்பு: முதல்-மந்திரிக்கு, பட்னாவிஸ் மீண்டும் கடிதம்
மராட்டியத்தில் 1,000 கொரோனா மரணங்களை அரசு மறைத்து இருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
மும்பை,
மும்பையில் 950 கொரோனா மரணங்களை மாநில அரசு மறைத்து உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதை தொடர்ந்து கூடுதலாக 1,000-க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த மரணங்களை மறைத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்து இருந்தது.
இந்தநிலையில், மாநிலத்தில் இன்னும் 1,000 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்படாமல் இருப்பதாக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மாநிலத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட 1,000 இறப்புகளை அரசு தெரிவிக்காமல் இருப்பது தவறானது. இது கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த மரணங்களாகும். ஒவ்வொரு கொரோனா மரணமும் 72 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. இது தொடர்பாக முதல்-மந்திரி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story