இந்தியாவில் 6 நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி


இந்தியாவில் 6 நாளில் 1 லட்சம் பேருக்கு  கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 Jun 2020 10:39 PM GMT (Updated: 27 Jun 2020 10:39 PM GMT)

இந்தியாவில் 6 நாளில் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் 6 நாளில் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 21 ந் தேதி வரை 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 5 லட்சத்து 9 ஆயிரத்தை நெருங்கியது. இதன் மூலம் 6 நாட்களில் சுமார் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இந்தியாவில் முதலில் 1 லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க கொரோனா 110 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆனால், தற்போது 39 நாட்களிலேயே 4 லட்சம் பேரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த மாதம் 1 ந் தேதியில் இருந்து நேற்று வரை மட்டும் 3 லட்சத்து 18 ஆயிரத்து 418 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காலை வெளியிடப்பட்ட புள்ளிவிவர பட்டியலில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 18 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 881 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 1 லட்சத்து 97 ஆயிரத்து 387 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் 175 பேரும், டெல்லியில் 63, தமிழகத்தில் 46, உத்தரபிரதேசத்தில் 19, குஜராத்தில் 18, அரியானாவில் 13, ஆந்திராவில் 12, மேற்குவங்காளம் மற்றும் கர்நாடகத்தில் தலா 10, தெலுங்கானாவில் 7, மத்தியபிரதேசத்தில் 4, பஞ்சாபில் 2, ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கார், பீகார், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் என ஒரே நாளில் 384 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 7,106 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. டெல்லியில் 2,492 பேரும், குஜராத்தில் 1,771 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை விவரம் அடைப்புக்குறிக்குள் வருமாறு: 

தமிழ்நாடு (1,025), உத்தரபிரதேசம் (630), மேற்குவங்காளம் (616), மத்தியபிரதேசம் (546), ராஜஸ்தான் (380), தெலுங்கானா (237), அரியானா (211), கர்நாடகா (180), ஆந்திரா (148), பஞ்சாப் (122), ஜம்மு காஷ்மீர் (91), பீகார் (58), உத்தரகாண்ட் (37), கேரளா (22), ஒடிசா (17), சத்தீஸ்கார் (13), ஜார்கண்ட் (12), அசாம் (9), புதுச்சேரி (9), இமாசலபிரதேசம் (9), சண்டிகார் (6), கோவா (2), மேகாலயா (1), திரிபுரா (1), லடாக் (1), அருணாசலபிரதேசம் (1).

முதல் 10 மாநிலங்களில் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1½ லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக இருக்கிறது. தேசிய தலைநகரான டெல்லியில் 77 ஆயிரம் பேருக்கும், குஜராத்தில் 30 ஆயிரம் பேருக்கும், உத்தரபிரதேசத்தில் சுமார் 21 ஆயிரம் பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. ராஜஸ்தானில் 16 ஆயிரத்து 660 பேரும், மேற்குவங்காளத்தில் 16 ஆயிரத்து 190 பேரும், அரியானாவில் 12 ஆயிரத்து 884 பேரும், மத்தியபிரதேசத்தில் 12 ஆயிரத்து 798 பேரும், 10 வது இடத்தில் உள்ள தெலுங்கானாவில் 12 ஆயிரத்து 349 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 11,489 பேருக்கும், கர்நாடகாவில் 11,005 பேருக்கும், கேரளாவில் 3,876 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 502 ஆக உள்ளது.


Next Story