மராட்டிய மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு


மராட்டிய மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2020 10:35 AM GMT (Updated: 29 Jun 2020 10:35 AM GMT)

ஜூலை 31ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மராட்டிய மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அங்கு தானே, கல்யாண்- டோம்பிவிலி, புனே என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.

மராட்டிய மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று 5 ஆயிரத்து 493 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 3-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலத்தில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 626 பேரை கொரோனா தாக்கி உள்ளது. நேற்று 2 ஆயிரத்து 330 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 86 ஆயிரத்து 575 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல மராட்டியத்தில் நேற்று மேலும் 156 பேர் உயிர்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 429 ஆகி உள்ளது.

இதற்கிடையே மராட்டியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலில் உள்ள 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவுக்கு வருகிறது. இதனால் மாநிலத்தில் 3 மாதத்துக்கு மேலாக இருக்கும் ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்படுமா அல்லது மீண்டும் நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 

இந்நிலையில் ஜூலை 31ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மராட்டிய மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட உள்ளூர் பகுதிகள் மற்றும் மாவட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசியமற்ற நபர்களின் நடமாட்டம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையாளர்கள் சில நடவடிக்கைகள் மற்றும் தேவையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story