பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு - ராகுல் காந்தி விமர்சனம்


பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு - ராகுல் காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 29 Jun 2020 11:42 AM GMT (Updated: 29 Jun 2020 11:42 AM GMT)

கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்ந்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 7-ம் தேதியிலிருந்து 22-வது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் இன்று உயர்த்தி அறிவித்துள்ளன. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 5 பைசாவும், டீசலுக்கு 13 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது, நேற்று ஒரு நாள் மட்டும் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதன் மூலம் கடந்த 3 வாரங்களில் 22 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.17 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.11.14 பைசாவும் விலை அதிகரித்துள்ளது. 

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 பைசாவாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.77.72 பைசாவுக்கும் இன்று விற்பனையாகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 22 நாட்களாக உயர்த்தப்பட்டு வருவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இதுகுறித்து கூறுகையில், “கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவு குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத அளவு உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறையும்போது நீங்கள் ஏன் விலையை உயர்த்துகிறீர்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார். 

Next Story