இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயார் : டிக் டாக் நிறுவனம்


இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயார் : டிக் டாக் நிறுவனம்
x
தினத்தந்தி 30 Jun 2020 5:35 AM GMT (Updated: 30 Jun 2020 5:35 AM GMT)

இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக டிக் டிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் நடந்த மோதலையடுத்து இந்தியா - சீனா இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷமும் இந்தியாவில் எழுந்து வருகிறது. 

அதேவேளையில், தொழில்நுட்ப துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் சீன நாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலும் மிகப்பெரிய சந்தையை கொண்டுள்ளன. குறிப்பாக செல்போன் செயலிகளாக டிக் டாக், ஹலோ போன்றவை இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பயனாளர்களைக் கொண்டுள்ளது. சீன நிறுவனங்களான இவை, பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சீனாவுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்ததால், இந்த செயலிகளுக்கு  தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. 

இதன்படி,  ‘டிக் டாக்’, ‘வி சாட்’, ‘ஹலோ’ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்து. இந்த நிலையில், தடை விதிக்கப்பட்டது .மத்திய அரசின் இந்த உத்தரவையடுத்து, கூகுள், ஆப்பிள் ப்ளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் செயலி அதிகாரப்பூர்வமாக இன்று நீக்கப்பட்டது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிக் டாக் நிறுவனத்தின் இந்திய பிரிவு, இந்தியாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இது  தொடர்பாக அந்நிறுவனம்  கூறியிருப்பதாவது:- “  தனிநபர் தரவுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் இந்திய சட்டங்களுக்கு இணைந்து தொடந்து செயல்பட தயாராக உள்ளோம்.  

இந்திய பயனாளர்களின் எந்த ஒரு தரவுகளையும் நாங்கள் சீனா உள்பட எந்த ஒரு நாட்டுடனும் பகிர்ந்து கொள்வது கிடையாது. கோரிக்கை வரும் பட்சத்தில் வரும் காலத்தில் இதே அணுகுமுறையை பின்பற்ற தயாராக இருக்கிறோம். தனிநபர்களின் அந்தரங்க தகவல்கள், மரியாதைக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிப்போம்.” என்று தெரிவித்துள்ளது.

Next Story