இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கியது; பாதிப்பில் 2-வது இடத்துக்கு சென்ற தமிழகம்


இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கியது; பாதிப்பில் 2-வது இடத்துக்கு சென்ற தமிழகம்
x
தினத்தந்தி 30 Jun 2020 11:00 PM GMT (Updated: 30 Jun 2020 10:41 PM GMT)

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பாதிப்பில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்துக்கு சென்றுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்துக்குள் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் புதிதாக 18 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரத்து 840 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 59.07 சதவீதம் பேர் அதாவது, 3 லட்சத்து 34 ஆயிரத்து 822 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 2 லட்சத்து 15 ஆயிரத்து 125 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 5,200 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அங்கு கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 69 ஆயிரத்து 883 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மீண்டும் 2-வது இடத்துக்கு தமிழகம் சென்றுள்ளது.

கடந்த மே மாதம் 19-ந் தேதியில் இருந்து கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் தமிழகம் இருந்து வந்தது. இதற்கிடையே தேசிய தலைநகர் டெல்லியில் திடீரென கொரோனா வேகமாக பரவ தொடங்கியது. இதனால் கடந்த மாதம் (ஜூன்) 22-ந் தேதி டெல்லி 2-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த நிலையில் தற்போது டெல்லியை பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் தமிழகம் அதே இடத்துக்கு சென்றுள்ளது.

புதிதாக பாதிப்புக்கு உள்ளான 3,943 பேருடன் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 85 ஆயிரத்து 161 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக 181 பேரின் உயிரை பறித்துள்ளது. தமிழகத்தில் 62 பேரும், டெல்லியில் 57 பேரும், குஜராத் மற்றும் கர்நாடகாவில் தலா 19 பேரும், மேற்குவங்காளத்தில் 14 பேரும், உத்தரபிரதேசத்தில் 12 பேரும், ஆந்திராவில் 11 பேரும், அரியானாவில் 9 பேரும், மத்தியபிரதேசத்தில் 7 பேரும், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் தலா 6 பேரும், பஞ்சாபில் 5 பேரும், ஜார்கண்டில் 3 பேரும், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 2 பேரும், அசாம், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் என 24 மணி நேரத்துக்குள் 418 பேர் இந்த வைரசின் பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியானவர் கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது.

Next Story