ஒரு தலைக்காதல்: டிக் டாக் பெண் பிரபலம் கொலை


ஒரு தலைக்காதல்: டிக் டாக் பெண் பிரபலம் கொலை
x
தினத்தந்தி 1 July 2020 4:55 AM GMT (Updated: 1 July 2020 4:55 AM GMT)

டிக் டாக்கில் பிரபலமான பெண் ஒருவர் அரியானாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி

இந்தியாவின் அரியானா மாநிலத்தின் குந்தில் என்னும் பகுதியில் அழுகு நிலையம் நடத்தி வந்தவர் ஷிவானி. இவருடன் இணைந்து, அவருடைய நண்பரான நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் நீரஜ் அழகு நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளார். அப்போது, சோதித்து பார்த்த போது, அங்கிருந்த கட்டிலின் படுக்கையில் ஷிவானியின் உடல்  கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஷிவானி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளன. அதுமட்டுமின்றி ஷிவானியின் செல்போனும் தொலைந்து போயுள்ளது.இதற்கிடையில் ஷிவானி கொலை செய்யப்பட்டது குறித்து, ஷிவானியின் பெற்றோர், ஷிவானியின் நண்பர் ஆரிப் என்ற இளைஞர் மீது புகார் அளித்தனர்.அதாவது, ஆரிப் கடந்த 3 ஆண்டுகளாக காதலிப்பதாக பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை ஷிவானி அவரை தவிர்த்து வந்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து ஆரிப் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போதே ஷிவானியின் பெற்றோர் போலீசில்  புகார் அளித்ததால், அப்போது போலீசார் ஆரிப்பை அழைத்து கண்டித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தான், சில தினங்களுக்கு முன் ஷிவானியை காண வேண்டி, அவரின் அழகு நிலையத்திற்கு ஆரிப் வந்துள்ளார். ஆரிப் வந்த தகவலை தனது சகோதரிக்கு மெசேஜ் மூலம் ஷிவானி தெரிவித்துள்ளார்.தொடர்ந்து அன்றிரவு, ஷிவானி வீட்டிற்கு வராத நிலையில், அவரது சகோதரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, தான் ஹரித்வாரில் இருப்பதாகவும், 3 நாட்களுக்கு பிறகு தான் வீட்டிற்கு வருவதாகவும் ஷிவானி எண்ணில் இருந்து மெசேஜ் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு ஷிவானியின் உடல், அழகு நிலையத்தில் கிடந்தது. ஷிவானியின் கழுத்தை நெரித்து கொலை செய்து பின் அவரின் எண்ணில் இருந்து சகோதரியின் எண்ணிற்கு ஆரிப் மெசேஜ் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் ஆரிப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தன்னை அவமதித்தால், கொலை செய்தேன் என்று ஆரிப் போலீசாரிடம் கூறியுள்ளார்.மேலும் உயிரிழந்த ஷிவானிக்கு டிக் டாக்கில், ஒன்றரை லட்சம் பேர் பின் தொடரும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story