டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 'பிளாஸ்மா வங்கி' - முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்


டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி - முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 July 2020 9:24 AM GMT (Updated: 2 July 2020 9:24 AM GMT)

டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புதிய நோயாளிகள் உருவாகி வருகின்றனர். இதனால் தலைநகரில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இதையடுத்து டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய திட்டமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இந்த வங்கி ஐ.எல்.பி.எஸ். ஆஸ்பத்திரியில் அமைக்கப்படுவதாகவும், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள எந்த நோயாளியும் இந்த வங்கியில் இருந்து பிளாஸ்மாவை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், நாட்டில் முதல் முறையாக அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை காணொலி காட்சி மூலமாக அம்மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வைத்தார். 

பிளாஸ்மா வங்கியை தொடக்கி வைத்த பின்னர் அவர் பேசியதாவது:-

பிளாஸ்மா தானம் செய்ய தகுதி வாய்ந்தவர்கள், பிளாஸ்மா தானம் செய்ய விரும்பினால், நீங்கள் எங்களை 1031 என்ற எண்ணில் அழைக்கலாம், அல்லது 8800007722 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் அனுப்பலாம். டாக்டர்கள் உங்களை தொடர்பு கொண்டு பேசி, உங்கள் தகுதியை உறுதிப்படுத்துவதுடன், பிளாஸ்மா தானம் செய்வது குறித்த தகவலையும் தருவார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களில், 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம். உடல் எடை 50 கிலோவுக்கு அதிகம் இருக்க வேண்டும். குழந்தை பெற்ற பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story