‘கொரோனா பாதித்த பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே குணமடைகிறார்கள்’: அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பதிவு


‘கொரோனா பாதித்த பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே குணமடைகிறார்கள்’: அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 5 July 2020 10:04 AM GMT (Updated: 5 July 2020 10:04 AM GMT)

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே குணமடைவதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 6,73,165 ஆக உள்ளது. 

நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மராட்டியத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது. தற்போது டெல்லியில் 97 ஆயிரத்து 200 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 68 ஆயிரத்து 256 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர். இதனால் அங்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 70% ஆக அதிகரித்துள்ளது

இந்நிலையில் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே குணமடைவதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், “டெல்லியில் தற்போது மிகவும் குறைவான நோயாளிகளுக்கே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே குணமடைந்து விடுகின்றனர். கடந்த வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் சுமார் 2,300-ஐ எட்டிய போதிலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 6,200ல் இருந்து 5,300 ஆக குறைந்தது. இன்று 9,900 கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் காலியாக உள்ளன” என்று பதிவிட்டுள்ளார். 



Next Story