மராட்டியத்தில் 279 போலீசாருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் 279 போலீசாருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 6 July 2020 12:43 PM GMT (Updated: 6 July 2020 12:43 PM GMT)

மராட்டிய காவல் துறையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 5,454 ஆக இன்று உயர்வடைந்துள்ளது.

புனே,

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்தியாவில் 6.97 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  19,701 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

நாட்டில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது.  தொடர்ந்து தமிழகம், டெல்லி, குஜராத் ஆகியவை உள்ளன.  மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.

மராட்டியத்தில் ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்றுவரை 4,071 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.  1,070 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதுவரை 70 போலீசார் உயிரிழந்து உள்ளனர்.  1,078 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இதனையடுத்து, மராட்டிய காவல் துறையில் கொரோனா பாதிப்புக்கு ஆளான போலீசாரின் எண்ணிக்கை 5,454 ஆக உயர்ந்துள்ளது.

Next Story