கொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது: சி.எஸ்.ஐ.ஆர். மீண்டும் உறுதி


கொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது: சி.எஸ்.ஐ.ஆர். மீண்டும் உறுதி
x
தினத்தந்தி 7 July 2020 12:57 AM GMT (Updated: 7 July 2020 12:57 AM GMT)

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுமா? பரவாதா? என்பது குறித்து இன்னும் சர்ச்சை நிலவி வருகிறது.

புதுடெல்லி,

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுமா? பரவாதா? என்பது குறித்து இன்னும் சர்ச்சை நிலவி வருகிறது.

32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டது என்றும், காற்றின் மூலம் அது பரவும் என்றும் கூறப்பட்டது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்தது. காற்றின் மூலம் கொரானா வைரஸ் பரவாது என்று அது தெரிவித்துள்ளது.

இந்த கருத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்.) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் ஆய்வக இயக்குனர் சேகர் மாண்டே ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் அவரிடமிருந்து கொரோனா வைரஸ்கள் சில அடி தூரம் காற்றில் பறந்து சென்று கீழே விழும்.

இதை வைத்து அது காற்றில் மிதக்கும் என்று கூற முடியாது. காற்றில் பரவும் வைரஸ்கள் என்பது காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் தன்மை கொண்டவை. சின்னம்மை, பெரியம்மை, இன்புளூயன்சா போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆனால் கொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது. எனவே இது காற்றின் மூலம் பிறருக்கு பரவாது’’ என்று கூறியுள்ளார். 

Next Story