இந்திய, சீன எல்லையில் இந்திய விமானப் படை விமானங்கள் தீவிர ரோந்து


இந்திய, சீன எல்லையில் இந்திய விமானப் படை விமானங்கள் தீவிர ரோந்து
x
தினத்தந்தி 7 July 2020 7:00 AM GMT (Updated: 7 July 2020 7:00 AM GMT)

இந்திய, சீன எல்லையில் நேற்று இரவு இந்திய விமானப் படை விமானங்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டன.

லடாக்,

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை தகராறு இருந்து வருகிறது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே கைகலப்பு நடந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ந் தேதி சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சிலர் காயம் அடைந்தார்கள். சீன தரப்பில் 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி ஆனார்கள்.

இதைத்தொடர்ந்து, எல்லையில் சீனா கூடுதல் படைகளை குவித்தது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் படைபலத்தை அதிகரித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனால் ராணுவ தளபதி நரவானே சமீபத்தில் லடாக் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆய்வு செய்தார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை லடாக் சென்று எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலவரம் பற்றி தரைப்படை, விமானப்படை, இந்திய-திபெத்திய பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே எல்லையில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் தூதரக மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பலனாக எல்லையில் பதற்றத்தை தணிக்க இருதரப்பும் படைகளை விலக்கிக் கொண்டுள்ளன.  

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முன்னணி நிலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த சீன வீரர்கள் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். தாங்கள் அமைத்து இருந்த கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்களையும் அவர்கள் பிரித்து எடுத்துச் சென்றனர்.

எனினும், லடாக் எல்லையில் தொடர்ந்து கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று இரவு இந்திய சீன எல்லையில்  தீவிர ரோந்து பணியில் இந்திய விமானங்கள் ஈடுபட்டன. போர் விமானங்களான மிக் -29,  சுகோய் 30 எம்.கே.ஐ. அப்பாச்சி தாக்குதல் ரக விமானங்கள்   தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டன. 

Next Story