கல்வான் பள்ளத்தாக்குக்கு சீனா சொந்தம் கொண்டாடுவதை இந்தியா மீண்டும் நிராகரித்தது


கல்வான் பள்ளத்தாக்குக்கு சீனா சொந்தம் கொண்டாடுவதை இந்தியா மீண்டும் நிராகரித்தது
x
தினத்தந்தி 9 July 2020 9:15 PM GMT (Updated: 9 July 2020 7:58 PM GMT)

கல்வான் பள்ளத்தாக்குக்கு சீனா சொந்தம் கொண்டாடுவதை இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது.

புதுடெல்லி, 

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே கடந்த மாதம் மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவுக்கு இறையாண்மை உள்ளது எனக்கூறி அந்த நாடு தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அதை இந்தியா நிராகரித்து வருகிறது. இதை நேற்று மீண்டும் இந்தியா உறுதிப்படுத்தியது.

இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிப்பதன் தேவையை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எல்லை விவகாரம் தொடர்பான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் உறுதிபூண்டுள்ளோம். அதேநேரம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என்று தெரிவித்தார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் சீன வெளியுறவு மந்திரிக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் கூட, ‘எல்லை நிர்வாகத்தில் இந்திய வீரர்கள் எப்போதும் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்வதாகவும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் எங்கள் படையினர் மிகுந்த உறுதிப்பாட்டை கொண்டிருப்பதாகவும்’ இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டதாக அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறினார்.


Next Story