இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியது


இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 15 July 2020 10:00 PM GMT (Updated: 15 July 2020 9:09 PM GMT)

ஒரே நாளில் 20 ஆயிரத்து 572 பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆனதை தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் மேலும் அதிகமாகி இருக்கிறது. தொடர்ந்து 4-வது நாளாக 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் புதிதாக 29 ஆயிரத்து 429 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்து 181 ஆக உயர்ந்துள்ளது.

ஒருபுறம் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தாலும், ஆறுதல் தரும் விஷயமாக மற்றொரு புறம் அதில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 20 ஆயிரத்து 572 பேர் ஒரே நாளில் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 92 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 3 லட்சத்து 19 ஆயிரத்து 840 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மராட்டியத்தில் 213 பேரும், கர்நாடகாவில் 85 பேரும், தமிழகத்தில் 67 பேரும், ஆந்திராவில் 43 பேரும், டெல்லியில் 35 பேரும், உத்தரபிரதேசத்தில் 28 பேரும், மேற்குவங்காளத்தில் 24 பேரும், பீகார் மற்றும் குஜராத்தில் தலா 14 பேரும், மத்தியபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் தலா 10 பேரும், பஞ்சாபில் 9 பேரும், ஜம்மு காஷ்மீரில் 8 பேரும், அசாம், அரியானா மற்றும் ஒடிசாவில் தலா 4 பேரும், ஜார்கண்டில் 3 பேரும், சண்டிகாரில் 2 பேரும், சத்தீஸ்கார், கோவா, கேரளா, உத்தரகாண்ட் மற்றும் அருணாசலபிரதேசத்தில் தலா ஒருவரும் என ஒரே நாளில் 582 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்து 309 ஆக உயர்ந்துள்ளது.

மராட்டியத்தில் மட்டும் 2 லட்சத்து 67 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 1 லட்சத்து 49 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 51 ஆயிரத்து 820 பேரில், 1 லட்சத்து 2 ஆயிரத்து 310 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையுடன், அதில் எத்தனை பேர் மீண்டுள்ளனர் என்ற எண்ணிக்கையையும் (அடைப்புக்குறிக்குள்) காணலாம்.

டெல்லியில் பாதிப்பு 1,15,346 (குணமடைந்தவர்கள் 93,236), கர்நாடகா 44,077 (17,390), குஜராத் 43,637 (30,503), உத்தரபிரதேசம் 39,724 (24,983), தெலுங்கானா 37,745 (24,840), ஆந்திரா 33,019 (17,467), மேற்குவங்காளம் 32,838 (19,931), ராஜஸ்தான் 25,571 (19,161), அரியானா 22,628 (17090), பீகார் 19,284 (12,849), மத்தியபிரதேசம் 19005 (13,575), அசாம் 17,807 (11,416), ஒடிசா 14,280 (9,864), ஜம்மு காஷ்மீர் 11,173 (6,223), கேரளா 8,930 (4,438), பஞ்சாப் 8,511 (5,663), சத்தீஸ்கார் 4,379 (3,275), ஜார்கண்ட் 4,091 (2,427), உத்தரகாண்ட் 3,686 (2,867), கோவா 2,753 (1,607), திரிபுரா 2,170 (1,538), மணிப்பூர் 1,672 (970), புதுச்சேரி 1,531 (829), இமாசலபிரதேசம் 1,309 (951), லடாக் 1,093 (946), நாகாலாந்து 896 (346), சண்டிகார் 600 (446), தாதர்நகர் ஹவேலி 520 (310), அருணாசலபிரதேசம் 462 (153), மேகாலயா 318 (66), மிசோரம் 238 (159), சிக்கிம் 209 (87), அந்தமான் நிகோபார் தீவு 166 (109).

மேற்கண்ட தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.

Next Story