பாகிஸ்தான் அரசின் டயாமர் பாஷா அணை கட்டுமான பணிக்கு மத்திய அரசு எதிர்ப்பு


பாகிஸ்தான் அரசின் டயாமர் பாஷா அணை கட்டுமான பணிக்கு மத்திய அரசு எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 July 2020 1:56 PM GMT (Updated: 16 July 2020 1:56 PM GMT)

பாகிஸ்தான் அரசின் டயாமர் பாஷா அணை கட்டுமான பணியை கடுமையாக எதிர்த்து வருகிறோம் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் ஆகியவற்றின் நிலப்பகுதியை பாதிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு டயாமர் பாஷா அணைக்கான கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறது.  இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பாகிஸ்தான் ஆளுமையின் கீழுள்ள காஷ்மீர் பகுதியில் இதற்கான அடிக்கல் நாட்டும் பணி கடந்த 1998ம் ஆண்டிலேயே நடந்தது.  கடந்த 2013ம் ஆண்டின்படி இதன் திட்ட மதிப்பு ரூ.1,400 கோடியாகும்.  இந்த நிலையில், மெகா நீர்மின் திட்டத்திற்கான கட்டுமான பணியை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் நேற்று தொடங்கி வைத்து உள்ளார்.  இதற்கு சீனாவும் ஆதரவு அளித்துள்ளது.

இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அனுராக் ஸ்ரீவஸ்தவா இன்று கூறும்பொழுது, சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் இந்திய பகுதிகளில் மாற்றங்களை மேற்கொண்டு வரும் பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்.  பாகிஸ்தானின் டயாமர் பாஷா அணையால், இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் பகுதிகளில் அமைந்த பெருமளவு நிலப்பகுதிகள் நீரில் மூழ்கி விடும்.

எந்தவித உரிமையும் இல்லாத பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழுள்ள இந்திய நிலப்பகுதிகளில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளால் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற அனைத்து வகையான திட்டங்களுக்கு எதிராகவும், தொடர்ச்சியாக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் கவலையும் தெரிவித்து வருகிறோம் என கூறினார்.

Next Story