’விகாஸ் துபே’ போலி என்கவுண்டரில் கொல்லப்படவில்லை; உச்ச நீதிமன்றத்தில் உ.பி போலீஸ் பிரமாணப்பத்திரம் தாக்கல்


’விகாஸ் துபே’ போலி என்கவுண்டரில் கொல்லப்படவில்லை; உச்ச நீதிமன்றத்தில் உ.பி போலீஸ் பிரமாணப்பத்திரம் தாக்கல்
x
தினத்தந்தி 17 July 2020 12:45 PM GMT (Updated: 17 July 2020 12:45 PM GMT)

விகாஸ் துபே போலி என்கவுண்டரில் கொல்லப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச போலீஸ் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் தன்னை பிடிக்க வந்த 8 போலீசாரை சுட்டுக்கொன்றுவிட்டு பிரபல ரவுடி விகாஸ் துபே தலைமறைவானான். நாடு முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய விகாஸ் துபேவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த ஜூலை 9 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் போலீசாரிடம் விகாஸ் துபே அகப்பட்டான். இதையடுத்து, உத்தர பிரதேச போலீசார், விகாஸ் துபேவை கான்பூருக்கு  காரில் அழைத்து வந்தனர்.

ஜூலை 10 ஆம் தேதி  அதிகாலை கான்பூர் அருகே வந்த போது விகாஸ் துபே உள்பட போலீஸார் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை பயன்படுத்தி விகாஸ் துபே தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, ஏற்பட்ட மோதலில், விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த என்கவுண்டர் சம்பவம் போலியானது என்று  பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக  உத்தர பிரதேச காவல்துறை டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த பிரமாணப்பத்திரத்தில், “ விகாஸ் துபே போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படவில்லை. இந்த வழக்கை தெலுங்கானா என்கவுண்டருடன் ஒப்பிட முடியாது. விகாஸ் துபேவை அழைத்துச்சென்ற கார் விபத்துக்குள்ளானதற்கு எங்களிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன.  உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் படியே அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story