ராஜஸ்தான் சட்டசபையை கூட்ட தயார்: அசோக் கெலாட் அரசுக்கு கவர்னர் நிபந்தனை


ராஜஸ்தான் சட்டசபையை கூட்ட தயார்: அசோக் கெலாட் அரசுக்கு கவர்னர் நிபந்தனை
x
தினத்தந்தி 27 July 2020 10:08 PM GMT (Updated: 27 July 2020 10:08 PM GMT)

ராஜஸ்தான் சட்டசபையை கூட்டுவது தொடர்பாக, அசோக் கெலாட் அரசுக்கு கவர்னர் நிபந்தனை விதித்துள்ளார்.

ஜெய்ப்பூர், 

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அந்த மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டத்தில், சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் கொறடா உத்தரவை மீறும் வகையில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் அவர்களுக்கு சபாநாயகர் சி.பி.ஜோஷி தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட்டு, சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேர் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த 24-ந் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையே, சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க விரும்பும் முதல்-மந்திரி அசோக் கெலாட், கவர்னரை சந்தித்து, சட்டசபையை கூட்டுமாறு கேட்டுக் கொண்டார். முதல் முறை அனுப்பிய கோரிக்கையை கவர்னர் நிராகரித்ததை தொடர்ந்து சட்டசபையை கூட்டுமாறு 2-வது முறையாக மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையை கூட்ட தயார் என்று அறிவித்துள்ள கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, திருத்தப்பட்ட அந்த கோப்பை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்.

“சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தால், அந்த கூட்டம் அரசுக்கு உள்ள மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கூட்டப்படுகிறதா? என்பது பற்றி அரசு தெரிவிக்க வேண்டும். சட்டசபையில் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால், சபையில் நடைபெறும் ஓட்டெடுப்பை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். மேலும் சட்டசபையை கூட்டுவதற்கு 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பவேண்டும்” என்று கவர்னர் நிபந்தனை இருக்கிறார்.

Next Story