கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை: உலகிலேயே மிக வேகமாக அதிகரிக்கும் நாடு இந்தியாதான்


கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை: உலகிலேயே மிக வேகமாக அதிகரிக்கும் நாடு இந்தியாதான்
x
தினத்தந்தி 27 July 2020 10:53 PM GMT (Updated: 27 July 2020 10:53 PM GMT)

உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பது இந்தியாவில்தான் என்று தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி, 

உலக அளவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில், அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

ஆனால், உலகிலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வரும் நாடு இந்தியாதான் என்று ‘புளூம்பெர்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றும் சுமார் 50 ஆயிரம்பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதாவது, கடந்த வாரத்தை விட பாதிப்பு 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில், மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுபோல், தினசரி பரிசோதனை எண்ணிக்கையையும் இந்தியா அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 5 லட்சத்து 15 ஆயிரத்து 472 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இருந்தாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் பரிசோதனை எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 11.8 பேர் என்ற விகிதத்திலும், பிரேசில் நாட்டில் 11.93 பேர் என்ற விகிதத்திலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

ஆனால், அமெரிக்காவில், ஆயிரம் பேருக்கு 152.98 பேர், ரஷியாவில் 184.34 பேர் என்ற விகிதத்தில் பரிசோதனை நடக்கிறது.


Next Story