இந்திய ராணுவத்தில் இணைந்தது ரபேல்: நமது ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் - ராஜ்நாத் சிங் டுவிட்


இந்திய ராணுவத்தில் இணைந்தது ரபேல்: நமது ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் - ராஜ்நாத் சிங் டுவிட்
x
தினத்தந்தி 29 July 2020 10:01 AM GMT (Updated: 29 July 2020 10:01 AM GMT)

பிரான்சில் இருந்து வாங்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் அம்பாலா விமான தளத்திற்கு வந்தன.


அம்பாலா,

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படும் இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும்.

தாக்குதல் ரகத்தை சேர்ந்த இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் ஆகும். அவற்றிலும் பிற விமானங்களில் இருப்பதுபோன்ற அனைத்து அம்சங்களும் இருக்கும். இந்த 36 விமானங்களும் அடுத்த ஆண்டு (2021) இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் விதியாகும். இதில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றை முறைப்படி பெற்றுக்கொள்வதற்காக கடந்த அக்டோபரில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றிருந்தார். அங்கு அவர் விமானங்களுக்கு பூஜையும் செய்தார்.

இந்த 10 விமானங்களில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே இருக்கும் நிலையில், மீதமுள்ள 5 விமானங்கள் முதல் பிரிவாக இந்தியா புறப்பட்டன.  நேற்று முன் தினம்  பாரீசில் இருந்து இந்தியாவை நோக்கி தனது பயணத்தை  தொடங்கிய ரபேல் விமானங்கள்,  

இந்தியா-பிரான்ஸ் இடையேயான 7 ஆயிரம் கி.மீ. தூரத்தை வெற்றிகரமாக கடந்து இன்று பிற்பகலில் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன. இந்திய வான்பரப்புக்குள் நுழைந்ததும் சுகோய் எம் 30 ரக போர் விமானங்கள் அழைத்து வந்தன.  இந்த விமானங்கள் சுமார்  3 மணியளவில் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் கம்பீரமாக தரையிறங்கியது. ரஃபேல் போர் விமானங்கள் நமது ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் என்று  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விமானத்தின் சிறப்பம்சங்கள்;

டசால்ட் நிறுவனத்தின் இந்த நவீன போர் விமானங்கள் மிக முக்கியமான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்றவை. குறிப்பாக ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பாளரான எம்.பி.டி.ஏ.வின் ‘மெடடோர்’ ஏவுகணை (வானில் இருந்து வானுக்கு) மற்றும் ஸ்கால்ப் நாசகாரி ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் பெற்றவை ஆகும்.

கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு அப்பால் சென்று தாக்கும் திறன் கொண்ட அடுத்த தலைமுறை ஏவுகணைகளான ‘மெடடோர்’ ஏவுகணைகள், ஒரு புரட்சிகர தயாரிப்பாகும். அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், சுவீடன் போன்ற நாடுகள் பொதுவாக எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவுக்காக மாற்றங்கள்

இந்த முக்கியமான ஏவுகணைகளை சுமந்து செல்வது மட்டுமின்றி, இந்தியாவுக்காக மேலும் சிறப்பான முறையில் பல மாற்றங்கள் இந்த போர் விமானத்தில் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக ரேடார் எச்சரிக்கை வாங்கிகள், ஜாமர்கள், 10 மணிநேர விமான தரவு பதிவு, தேடுதல் மற்றும் வழிகாட்டி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த விமானங்களில் அடங்கி உள்ளன.

இந்த நவீன போர் விமானங்களை இந்தியாவே ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறது. இவற்றை கையாளுவதற்காக சிறப்பான பயிற்சிகள், உள்கட்டமைப்புகள் என அனைத்து விதமான முன்தயாரிப்புகளோடு இந்திய விமானப்படை தயாராக உள்ளது.

சீன எல்லையில் பணி


இந்த விமானங்கள் லடாக் செக்டாரில் சீனாவுடனான உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பணியில் அமர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது இந்திய விமானப்படையின் வலிமை மற்றும் செயல்பாட்டு திறன்களை மேலும் அதிகரிக்கும்.

அடுத்த பிரிவு ரபேல் விமானங்கள் மேற்கு வங்காளத்தின் ஹசிமரா விமானப்படை தளத்தில் இணைக்கப்படுகின்றன. ரபேல் விமானங்களை பராமரித்தல், அவற்றுக்கான கொட்டகை அமைத்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்த 2 விமானப்படை தளங்களிலும் ரூ.400 கோடி அளவுக்கு செலவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது

Next Story