சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுமா? மராட்டிய உள்துறை மந்திரி பதில்


சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுமா? மராட்டிய உள்துறை மந்திரி பதில்
x
தினத்தந்தி 29 July 2020 3:03 PM GMT (Updated: 29 July 2020 3:03 PM GMT)

ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் மும்பை போலீசார், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நடிகர்கள் உள்பட 38 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சுஷாந்திடம்  நிதி முறைகேட்டில் ஈடுபட்டு, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக பாட்னாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், கடந்த ஒரு வருடமாக, சுஷாந்த்தின் வங்கி கணக்கிலிருந்து ரியாவுக்கு 15 கோடி ரூபாய் வரை, பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுஷாந்தின் வங்கி கடன் அட்டைகள், வங்கி கணக்குகளை, ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி, சுஷாந்த்தை விட்டு ரியா பிரிந்து சென்றதாகவும் அப்போது வீட்டில் இருந்த ரொக்கப்பணம், மற்றும் நகைகளை எடுத்து சென்றதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது, சுஷாந்தின் மருத்துவ அறிக்கைகளையும், பொது வெளியில் வெளியிட போவதாக ரியா மிரட்டியதாகவும், சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாகவும் போலீசார் விடுத்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுஷாந்த் மரண வழக்கு தொடர்பாக ஆவணங்களை பெறுவதற்காக, பீகார் போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.  ரியா மீது, சுஷாந்த்தின் தந்தை அளித்துள்ள புகார் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கை மும்பை காவல்துறையே தொடர்ந்து விசாரிக்கும் என்று மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அனில் தேஷ்முக் , சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை மும்பை போலீசாரே தொடர்ந்து விசாரிப்பர். இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்படாது என்று தெரிவித்துள்ளார்.


Next Story