சமூக வலைத்தளங்களில் உள்ள சசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
சமூக வலைத்தளங்களில் உள்ள சசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சமூக வலைத்தளங்களில், தன்னை பற்றிய அவதூறு பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, கடந்த ஜூன் 2-ந் தேதி சசிகலா புஷ்பாவின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவர் பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம், கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழக் குக்கான செலவினங்களுக்கு அபராதமாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக சசிகலா புஷ்பா தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சித்தார்த் மிருதுள் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், சசிகலா புஷ்பா சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்தனர். மேலும் பேஸ்புக், கூகுள், யூடியூப் ஆகியவற்றில் சசிகலா புஷ்பா தொடர்பான ஆட்சேபகரமான பதிவுகளை நீக்குமாறும் உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story